புராணங்கள் : ஒரு பார்வை

திரு மூலர், ஸ்ரீ அரவிந்தர், ஆனந்த குமாரசாமி, கார்ல் உங், ஜோசப் காம்பெல், கோசாம்பி, ஜெயமோகன் என புராணங்களின் அனைத்து பரிமாணங்களையும் பரிணாமத்தையும் கண்டு வியந்திட பகிர்ந்திட

Thursday, November 09, 2006

அமெரிக்க விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

அல்லது ஒரு தொன்மம் எப்படி அறியப்பட கூடாது?




2002 அக்டோபரில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு 'பாலம் ' இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்தின் திரேதா யுக காலத்துடன் ஒத்து போவதாகவும் கூறியது. பொதுவாக இவ்வாறு நம் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் அறிவியல் 'கண்டுபிடிப்புகள் ' உடனடியாக காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இன்று இத்தகைய காட்டூத்தீ பரவலுக்கு மூல காரணமாகவும் பரவும் ஊடகமாகவும் இணையம் இருந்து வருகிறது.


'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் ' செய்தி எங்கிருந்து பெறப்பட்டதென்பதை மிக சரியாக கூறமுடியாவிட்டாலும் நுறெ¢றுக்கு தொண்ணுெறு சதவிகிதம் இணையத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, 'இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ' என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் 'பாலத்தின் ' காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த 'தகவல் ' இந்த இடத்தில் நிலவி வரும் 'மர்மமான புராணக் கதையான இராமாயணம் ' ( 'mysterious legend ') நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் 'மர்மமான புராணக் கதை 'யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு நிலை பிறழ்ந்த மூளையில் உதித்த மோசடி வேலை.


உதாரணமாக எங்கள் ஊரில் 'தாடகை மலை' என ஒரு மலை உள்ளது. ஒரு பெண்ணின் வடிவம் கொண்ட மலை. இராமன் அம்பு எய்து கொன்ற தாடகை மலையாகி வீழ்ந்தாள் என பாட்டி சொல்லி கேட்டதுண்டு. ஒரு தொன்மம் நிலப்பரப்பின் இயற்கை அமைப்புகளுடன் எவ்விதத்தில் பொது பிரக்ஞையில் இயைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. இராமாயணம் எந்த அளவு நம்மில் இரண்டற கலந்துள்ளது என்பதற்கான சான்றும் கூட. ஆனால் இங்கு நடத்தப்பட்ட நிலவியல் பரிசோதனைகளில் நிலத்து உயிர்ம சத்து (organic carbon content) சிறிது வேறுபடுகிறது என வைத்துக்கொள்வோம் அதைவைத்து இது தாடகையின் உடல் எனக் கூறினால் அது எந்த அளவு நம்மை நாமே அவமானப்படுத்தும் செயல் என நினைத்துப்பாருங்கள். அதே நேரத்தில் தொன்மம் பாரதமெங்கும் இத்தகைய புனித நிலப்பரப்புகளை (sacred landscapes என்போமா) உருவாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.


ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் உள்ளன.


மேலே நீங்கள் பார்த்தது நாசா செயற்கை கோள் புகைப்படம காட்டும் அதே நிலப்பரப்பினை அதனைவிட தெளிவாக பாரத செயற்கை கோளான ரிசோர்ஸ்ஸாட் படமெடுத்துள்ளது. பால அமைப்பு பவளப்பாறைத் தொகுப்பேயன்றி அது மானுட உருவாக்கம் அல்ல என்பதனை இப்புகைப்படம் நிரூபிக்கிறது. (http://www.isro.org/pressrelease/ph2.jpg)
திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.


துரதிஷ்ட வசமாக இச் 'செய்தி 'யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது. இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகளின் வரலாற்றடிப்படை குறித்து பொதுவாக உண்மையாகவே இருக்க முடியும் என்பதே பல வரலாற்றறிஞர்களின் முடிவு. வேத காலத்திற்கு சற்று பின்னே இராமயணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும். வேத தொகுப்பிற்கு சற்று (சில நூற்றாண்டுகள்) பின்னாக இராமகாதை இயற்றலுக்கு சற்று முன்னதாக இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.


இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை 'பாலமா 'க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் 'சீதாயாம் சரிதம் மகத் ' என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்கு-மானுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது.


'முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்'



எனும் திருமந்திர வாசகத்தின் அறிவியல் பார்வை இவ்விஷயங்களில் சறுக்கி விழாமல் நம்மை வழிநடத்தட்டும். தொன்மங்கள் அக நிகழ்வுகளை விளக்கிடும் ஒரு மொழி அம்மொழி இம்மண்ணில் செம்மை அடைந்தது மட்டுமன்றி அதனை மேலும் மேலும் மெருகடைய செய்து அதனை ஒரு அறிவியல் துறையாகவே மாற்றியுள்ளது நம் மரபு. துரதிர்ஷ்டவசமாக பகுத்தறிவு என்னும் பெயரில் இந்த புராணமரபு உதாசீனப்படுத்தப்பட்டது மட்டுமின்றி அதனை மரபு நீக்கம் செய்யவும் அது உண்மையான மரபல்ல எனக் கூறவும் காலனிய ஆதிக்க தாக்கம் பெற்ற 'பகுத்தறிவுவாதிகள்' முயன்றனர். இதே மனத்தாக்கத்தின் மற்றொரு விளைவே புராண மரபுகளுக்கு சரித்திர ஆதாரத்தினை தேடும் போக்கு. எனில் புராண நிகழ்வுகளுக்கு சரித்திர மையக்கரு இருந்திருப்பதே இயலாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. வரலாற்று மையமும் புராணத்துவ தன்மைகளுமாக இணைந்து பரிணமிக்கும் ஒரு ஜீவ இயக்கமாகவே புராணம் காணப்பட வேண்டும். ஒரு புராணத்தின் வரலாற்று கரு அறிவியலின் உரைகல்லில் தேய்த்துப்பார்த்தே அறியப்பட வேண்டும். அது ஒரு பிரித்துச் சேர்க்கப்படும் புதிரைப்போல மீள்-அமைக்கப்பட வேண்டும். மாறாக ஒரு காவியத்தின் புராணத்தன்மைக்கு அறிவியல் சான்று அளித்தல் என்பது 'முப்புரம் செற்றனன்' எனக் கூறும் மூடர்களின் செயல்.

Thursday, November 02, 2006

உண்மை நிகழ்வா உலகப் பெரும் ஊழி?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

உலகத்தையே அழித்திட்ட வெள்ளப்பெரு ஊழி குறித்து பல சமுதாயங்களின் புராணங்கள் பேசுகின்றன. இவற்றுள் மிகப் பழமையானது கில்காமெஷ் தொன்மக்கதையே ஆகும்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு தொன்மவீரன் இந்த பெரு ஊழியிலிருந்து தப்பி பின் மீண்டெழுந்த மானுடத்தின் தந்தை என போற்றப்படுகிறான். இந்த ஊழி மற்றும் புனர் எழுச்சி
என்பதே ஒரு தொன்மப்படிமமாக இருக்கலாம். பல நாகரீகங்கள் இயற்கை சீற்றத்தினை இறைவனின்/கடவுளரின் தண்டனையாக கருதின. அழிக்கப்பட்ட சமுதாயங்கள் அவை செய்த
பாவத்தினால் அழிந்ததாகவும் கருதின. (இதில் பண்டைய தமிழரை ஒரு நல்ல விதிவிலக்கென கூறலாம். பின்னாளில் போலி-வரலாற்று பேர்வழிகளால் கண்டமாக்கப்பட்டு அறிவியல் மதிப்பிழந்து நிற்கும் குமரி நிலநீட்சி கடல் நீர்மட்ட உயர்வால் அழிந்த தொல்-வரலாற்று குடியிருப்புகளைக் குறித்த நினைவாக இருக்கலாம். ஆனால் கற்பனையில் தேர்ந்தவர்களும் ஆன்மச்செழுமையில் எவருக்கும் குறையாதவர்களுமான தமிழர் எந்த தெய்வ தண்டனையாகவும் இந்த அழிவு நினைவுகளின் தொன்ம உருவாக்கத்தில் குறிப்பிட்டிடவில்லை.) ஆனால் இந்த தொன்மப் படிமம் விவிலியத்தில் நுழைந்த பின்னர் வரலாற்று உண்மை எனும் அந்தஸ்தை பெற்றது. பல நாடுகளின் வரலாற்றினை எழுதிய கிறிஸ்தவ மத துறவிகள் அந்நாடுகள் எங்ஙனம் நோவாவின் (விவிலிய ஊழி நாயகன்) சந்ததிகளால் அந்தந்த பிரதேசங்கள் குடியேற்றம் அடைந்தன என்பதனை விவரிக்கலானார்கள். இசுலாமிய மீள்-வாதத்திலும் நோவாவின்
வெள்ள ஊழி உலகளாவிய சரித்திர நிகழ்ச்சியாக இடம்பிடிக்க ஆரம்பிக்கலாயிற்று. அண்மைக்காலங்களில் இந்த நோவாவின் ஊழிக்கான நிலவியல் ஆதாரங்கள், நோவாவின் பேழை (ark) துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் கதை (உதாரணமாக காண்க: நோவா பிரளயத்தை சரித்திர உண்மை நிகழ்வு என வாதிடும் ஒரு அடிப்படைவாத வலைப்பதிவு இங்கு.

இத்தகைய போக்குகள் - தொன்மங்களை நேரடியாக பொருள் கொள்ளுதல் அனைத்து சமயங்களிலும் உண்டு. பவளப்பாறை அமைப்புகளை இராமன் கட்டிய பாலத்துக்கு
ஆதாரமாக கூறும் போக்கு போன்றது இது. ஆனால் ஆபிரகாமிய நெறிகளில் -குறிப்பாக எவாஞ்சலிக்கல் மற்றும் வகாபிய போக்குகளில்- இந்த போக்கு பிரச்சார வேகத்துடன்
எழுந்து தன்னை சரித்திர உண்மையாக பிரகடனம் செய்து வருகிறது. "முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்" என்பார் திருமூலர். தொன்மத்தை
அகத்துவ பயணத்தின் குறியீட்டு கதையாடலாக மாற்றுவது எந்த அளவு ஆரோக்கியமானதோ அந்த அளவு ஆரோக்கியமற்ற அறிவியல் விரோத போக்கு நேரடி பொருள் கொண்டு
போலி வரலாறு திரிக்கும் அடிப்படைவாத போக்கு. தொன்மங்களின் ஆதார ஆற்றலையே அழிக்கும் குறுகலான பார்வை இது. மேலே சுட்டிய அடிப்படைவாத பார்வை எவ்வாறு
புராணங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே அவற்றிலுள்ள தவறுகளை இங்கு காணலாம்.


'முஹம்மதே! இவை மறைவான செய்திகள். இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம். இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை.
எனவே பொறுமையைக் கடைபிடிப்பீராக! நம்மை அஞ்சுவோருக்கே நல்ல முடிவு உண்டு.' 11 : 49 - குர்ஆன்.
இது போன்ற செய்திகள் அன்றைய அரபு மக்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை காலமாகியும் இவை எல்லாம் நமக்கு புதிய செய்திகளாகவே தெரிகிறது. மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்? என்ற கேள்வி வருகிறதல்லவா?


மெசபடோமியா பிரதேசத்துடன் அன்றைய அராபிய பிரதேசத்திற்கு நல்ல தொடர்பிருந்தது, வியாபார தொடர்பும் இருந்தது. இந்த ஊழிக்கதை அராபியருக்கு தெரிந்திருக்கவே
செய்தது. மேலும் தமது புனித வரலாற்றில் இத்தொன்மத்தை இணைத்துக்கொண்ட யூத மக்களும் அங்கு வாழ்ந்தனர். எனவே "இதற்கு முன் நீரும் உமது சமுதாயத்தினரும் இதை அறிந்திருக்கவில்லை." என குரான் கூறியிருப்பது வெள்ள ஊழிக்காதையாக இருக்கும் பட்சத்தில் குரானில் தகவல் பிழை உள்ளதென்றே கருதவேண்டும். துருக்கியில் உள்ள மலையில் நோவாவின் பேழை ஒதுங்கியது என்பதும் ஆதாரமற்றதாகும். இது குறித்து பல பதிவுகள் பல மோசடிகள் வெளியாகியுள்ளன. ஊழி என்பதே சுமேரிய பிரதேசத்தில் நிகழ்ந்த வட்டார நிகழ்வாக இருக்கலாம். இதுவே பின்னாளில் தொன்மமாக உரு பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறார் ஐசாக் அஸிமாவ்.

சுமேரிய தொன்மங்களுக்கும் விவிலிய பிரளய விவரணத்துக்கும் இருக்கும் இணைத்தன்மைகளை சுட்டிக்காட்டுகிறார் அஸிமாவ். பொதுவாக இந்த சுமேரிய பிரளயம் ஏற்பட்டதாக கருதப்படும் காலமான கிறிஸ்து சகாப்தத்திற்கு முந்தைய மூவாயிரத்தை (கிமு 3000-2700) ஒட்டிய எகிப்திய பதிவுகள் எதுவுமே இந்த பிரளயத்தைக் குறித்து கூறாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


அண்மையில் சர்ச்சையை கிளப்பியுள்ள மற்றொரு ஆராய்ச்சி வால்டர் பிட்மன் மற்றும் பில் ரையன் என்போரது. துருக்கியின் போஸ்போரஸ் (Bosphorous) நீர்வாயில் ஏற்பட்ட பெரு
வெள்ள அழிவுக்கு பின்னர் மெசபடோ மியா ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு நகர்ந்த மக்கள் இன குழுக்களே இந்த பெரு ஊழிக்கதையை கொண்டு சென்றிருக்கலாம் என அவர்கள்
ஊகிக்கின்றனர். 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திட்ட ஊழிப் பேரழிவு இது என அவர்கள் கணிக்கின்றனர். சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ஆராய்ச்சிகள் மீண்டும் பெரூஊழி
தொன்மம் தொல்-நினைவில் வாழும் ஒரு வட்டாரம் சார்ந்த நிகழ்வே அன்றி பிற்கால இறைநூல்களில் விவரிக்கப்படும் இறை விருப்பு-வெறுப்பு சார்ந்த வரலாற்று நிகழ்வல்ல என்பதனைக் கூறிடும். (குரானில் கூறப்பட்டுள்ளதே நோவாவின் சமுதாயத்தை மட்டும் அழித்த பிரளயம்தான் என்று வாதிடலாம். ஆனால் இங்கு அடிப்படையே இந்த நோவா தொன்மமே வரலாறு அடிப்படையில்லாதது. ஊழி ஒரு வட்டார நிகழ்வின் தொல் பதிவு. அதன் வரலாற்றுக் கணக்கு விவிலிய/குரானிய காலகணக்கிற்கு ஒத்துவராத ஒன்று.)


இந்திய வேத இலக்கியங்களில் உலகழிக்கும் பெரு ஊழி குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. வேதத்தில் இல்லாததால் பொய் என்று சொல்ல வரவில்லை. மாறாக உலகளாவிய
அழிவென்றால் அது வேதத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவை குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பது உலகளாவிய ஊழி என்பது தொன்ம பெரிதுபடுத்தலே ஆகும்.
பிற்கால புராணங்களிலேயே உள்ளது. இதிகாசங்களில் துவாரகை அழிவு குறித்து குறிப்பு வருகிறது. அதுவும் கடல்கோள் என்பதாக இருக்கிறது. அதுவும் முழு உலகு சார்ந்த அழிவு
இல்லை. ஆக, நோவா, யுத்னபிஷ்டிம், மனு போன்ற கதாபாத்திரங்கள் தொடர்புடைய பெருஊழி என்பது தொன்ம உருவாக்கம் மற்றும் அதன் விரிவடைதலே ஆகும்.


'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞசிக் கொள். வானமே நீ நிறுத்து!' என்று கூறினோம். தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலையின் மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமானோர் எனவும் கூறப்பட்டது. குரான் 11 : 44

மேற்கூறிய அடிப்படைவாத பதிவில் ஜுதி மலை துருக்கியில் உள்ள மலைத்தொடராக கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்கிபீடியா பதிவு முக்கிய விஷயங்களைக் கோடிட்டு காட்டுகிறது:
"ஜூதி மலைக்கு துருக்கியில் குடி-தாக்(Cudi-Dagh) என பெயர். இதற்கு துருக்கியில் 'மிக உயர்ந்த' அல்லது 'உயரங்கள்' என அராபியில் பொருள். கிழக்கு துருக்கியில் பல மக்களும் சில இஸ்லாமிய அறிஞர்களும் இதுவே அராரத் என கருதுகின்றனர். ஆனால் குடி-தாக் வான் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதன் உயரம் 7700 அடி ஆகும். உள்ளூர் வாசிகள் இம்மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்துக்கு நோவாவின் பேழை மிதந்து சென்றது என கருதுகின்றனர். ...ஜுதி என்றும் ஒரு மலை உள்ளது. அராரத் என்றும் ஒரு மலை உள்ளது. இரண்டுமே விவிலிய விவரணத்தில் வரும் அராரத் (உரர்து) பகுதியில் அமைந்துள்ளன. பைபிளும் குரானும் ஒரே குரலில் பேழை வந்தமர்ந்த இடத்தைக் குறித்து பேசுவது சாத்தியமே. அராரத் மலையும் ஜுதி மலையும் ஒரே மலைதானா? சிலர் இவ்விரு பெயர்களையும் ஒன்று போல மாற்றி மாற்றி பயன்படுத்துவதை காணலாம்."
முகமதுவின் காலத்திற்கு முன்னரே அராரத் மலைத்தொடரும் நோவாவின் பேழையும் இணைத்து பேசப்பட்டுவிட்டன. சிரியா ஈராக் ஈரான் ஆகிய நாடுகளுக்கு அருகாமையில் உள்ள ஜுதி மலைத்தொடர் அராபியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. அத்துடன் ஏற்கனவே யூதேய-கிறிஸ்தவ வழக்காடல்களில் அராரட் மலையில் நோவாவின் பேழை குறித்து அறிந்தவராகவே முகமதுவும் இருந்திருப்பார்.



மேலே கூறிய அடிப்படைவாத வலைப்பதிவு பின்வருமாறு வியப்படைகிறது.
மக்கா,மதீனா, சிரியா,எமன் போன்ற நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்த முகமது நபி துருக்கி நாட்டில் உள்ள ஜூதி மலையில் நோவாவின் கப்பல் இன்றும் பாதுகாக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை எப்படி அறிந்திருக்க முடியும்?
என வியப்படைகிறது. ஆனால் மேலே உள்ள வரைப்படத்தை பார்த்தால் இந்த வியப்பு அவசியமற்றதென்று புரியும். இன்றைய துருக்கியின் சிரியா ஈராக் அருகேயுள்ள பகுதியில் மெசபடோ மிய நாகரிகத்தொட்டில் பிரதேசத்தின் அருகிலேயே இந்த பெரு வெள்ள ஊழி தொன்மத்தொடர்பான நில அமைப்புகள் அமைந்திருக்கின்றன என்பதனைக் காணலாம். இதில் விசேஷ இறைசெய்தி இறக்கம் எதுவும் தேவையில்லை. வட்டார கதைகளின் பரவுதலே போதுமானது. வானவர் கபிரியேல் தேவையில்லை சாதாரண மானுடத்தின் கதைசொல்லும் திறனே போதுமானது.இன்னமும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த ஜூதி என்கிற பெயரில் தெற்கரேபியாவில் ஒரு மலை இருப்பதுதான். துருக்கியில் இருக்கும் ஜூதி மலைக்கு 200 ஆண்டுகளாகவே அந்த பெயர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இஸ்லாமியர் வருவதற்கு முன்னரே கிறிஸ்தவ மடாலயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது (பார்க்க: http://www.islamonline.net/english/Science/2002/10/article07.shtml)

இம்மலைத்தொடரில் அவ்வப்போது ஏதாவது ஒரு சிகரத்தில் நோவாவின் பேழை அகப்பட்டதாக புரளி கிளம்புவதும் பின்னர் அது தவறு என நிரூபிக்கப்படுவதும் ஏறத்தாழ வழக்கமான நிகழ்வாயிற்று. இதற்கு உடனடியாக சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆதரவு/எதிர்ப்பு தெரிவிப்பதுவும் அவ்வாறே.
உதாரணமாக கூறவேண்டுமானால் இம்மலைத்தொடரில் ஈரான்-துருக்கி எல்லைக்கு வடக்கே இருமைல் கல்கள் தொலைவில் இருக்கும் துருப்பினார் (துருக்கி விமானப்படை கேப்டன் இல்ஹான் துருப்பினார் பெயரில்) அமைப்பு. படகு போல இருக்கும் இந்த அமைப்பு ரோன்வாய்ட் என்பவரால் நோவாவின் பேழையாக பிரபலப்படுத்தப்பட்டது (அன்னார் ஸியோன் மலை சவூதி அரேபியாவில் உள்ள ஜெபெல் அல் லாவ்ஸ் எனக் கூறியவர்) பின்னர் துருக்கியின் நிலவியல் அறிவியலாளர் முரத் அவ்ஸி தெள்ளத்தெளிவாக இது இயற்கையின் உருவாக்கமே அல்லாது பேழையல்ல என நிரூபித்தார். அதன் பின்னர் சிறிது நின்றிருந்த இந்த பேழை திருவிளையாடல் மீண்டும் தொடங்கியுள்ளது.
(முழு கட்டுரையையும் இந்த உரலில் காண்க: http://noahsarksearch.com/AvciMurat/TelcekerEarthFlow.pdf)

முதலில் குறிப்பிட்ட அடிப்படைவாத வலைப்பதிவு குறிப்பிடும் மலை சிகரம் குறித்து (17,000 அடி ஏறத்தாழ 5,200 மீட்டர்கள்) நேஷனல் ஜியாகிராபிக் அண்மையில் சில தகவல்களை வெளிக்கொணர்ந்தது. அச்சிகரத்தில் பேழை இருப்பதாக 1989 இல் தன்னந்தனியாக இச்சிகரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்ட அகமது அலி அர்ஸ்லான் பேழைக்கு 200 அடி தூரத்தில் தான் சென்றதாகவும் அதனை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதன் உண்மையை சந்தேகிக்கின்றனர். ஒரு பேழை குறித்து ஆராய்ச்சி செய்பவர் கூறுகிறார்: 'அகமது பெரிய வாய் சவடால் காரர் ஒரு சமயம் தன்னிடம் நோவாவின் பேழையின் 3000 புகைப்படங்கள் இருப்பதாகவும் திடீரென 5000 புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுவார்' இந்த தேடலை இயக்குகிற மெக்கிவன் 2003 இல் ஏற்பட்ட வெப்பமேற்றத்தினால் பனி உருகியதால் கிடைத்த சில செயற்கைகோள் புகைப்படங்களை இதற்கு ஆதாரமாக கூறுகிறார். ஆனால் இந்த படங்களின் அடிப்படையில் தேடுவது அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல என்றே தோன்றுகிறது. "இதெல்லாம் வெறும் நம்பிக்கை அவ்வளவுதான்" என்கிறார் லாரன்ஸ் காலின்ஸ். கலிபோர்னிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற நிலவியல் பேராசிரியரும் நிலவியல் புகைப்பட ஆராய்ச்சியாளருமான இவர் இவ்வாறு மனிதரால் உருவாக்கப்பட்டதாக தோன்றுகிற ரீதியில் புகைப்படம் எடுக்கப்பட்டவை அருகில் சென்று பார்க்கையில் அவ்வாறில்லதாதாகிவிடும் என சுட்டிக்காட்டுகிறார்.பொதுவாக நிலவியலாளர்கள்15000 அடி உயரத்தில் கப்பல் நிற்பதெல்லாம் இயலாத காரியம் என்றே கருதுகின்றனர். (நேஷனல் ஜியாகிராபிக் செய்தி செப்டம்பர், 2004)

இதற்கிடையே 2005 இல் காஸ்மோபோஸிக் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த அறிவியலாளர்கள் இந்த 'நோவா பேழை'யும் இயற்கை உருவாக்கமே என்பதனை அறிவித்துள்ளனர். http://news.nationalgeographic.com/news/2004/09/0920_040920_noahs_ark.html

Labels: ,

Wednesday, November 01, 2006

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை
வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர வாழ்வின் இரகசியத்தை தேடும் பயணம். இறப்பிலிருந்து விடுதலை. மரணம் குறித்த அச்சம். தனது மரணத்தை அமைதியாக ஏற்கிறான் என்கிடு. ஆனால் என்கிடுவின் மரணத்தின் சாட்சியாக விளங்கும் கில்காமெஷுக்கு அதுவே தூண்டுதலாக அமைகிறது. அதுவே அவனது மரணத்தை காட்டுகிறது.

அண்மையில் வெளியான ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில் ஜெடை வீரனான அனாகின் ஸ்கைவாக்கர் டார்த் வாடராக மாற அவனை தூண்டுவது மரணத்த்தின் அச்சமே. ஹாரி பாட்டரில் வரும் லார்ட் வோல்டர்மார்ட் அஞ்சுவது மரணத்தையே.
பிரபு டிராகுலாவின் மாற்றம் அவன் மனைவியின் மரணத்தை தொடர்ந்து நிகழ்வதாகும். மரணமற்ற நித்தியவாழ்விற்கு இரத்தம் அருந்தும் சடங்கு மேற்குலகில் இரு துருவங்களிலும் இயங்குவதாகும். எதுவாயினும் மேற்கின் பிரக்ஞையில் மரணத்தை வெல்லும் மகா இச்சையின் தூண்டுதலின் வேர்களை கில்காமெஷிலிருந்து காணமுடியும்.
அது போலவே மூன்றில் ஒருபாகம் இறைத்தன்மையும் ஒரு பாகம் மானுடத்தன்மையும் கொண்ட மேய்ப்பனாகவும் அரசனாகவும் திகழும் புராண நாயகன் வழக்கு மேற்கத்திய பிரக்ஞையில் இருப்பதை காட்டுவது இது. ஏசுவின் உடலில் இருந்து இரத்தமும் நீரும் வெளிவந்த (யோவான் 19:34) கூற்று இதிலிருந்தே எழுந்ததாகும். கிரேக்க புராண மரபில் கடவுளரின் உடலில் ஓடுவது நீரே ஆகும். ஏசு மனிதகுமாரன் தேவகுமாரன் ஆகிய இரண்டும் என்பதால் அவரது உடலிலிருந்து இவை இரண்டும் வெளிவந்ததாக கூறப்படுகிறது. இந்த விவிலிய கதையாடலின் வேர்கள் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனிலிருந்தன.


என்கிடு வந்த பின் ஏன் கில்காமெஷ் மாறிவிட்டான்? ஷெல்டன் கோப் மனநல சிகிட்சையாளர். மனநலசிகிட்சையை ஒரு புண்ணிய யாத்திரையாக காண்பவர்.

தன்னுடைய புகழ்பெற்ற 'If you meet Buddha in the road kill him' எனும் நூலில் ஒரு அத்தியாயம் கில்காமெஷுக்கு ஒதுக்குகிறார்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது என்கிடு இருக்கிறான் - அவனது மறுபாதி அவனது மறைந்திருக்கும் சுயம். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இந்த மறைவான சுயத்திடமிருந்து தன்னை விலக்கி வைத்துள்ளானோ அந்த அளவு அவது வாழ்க்கை வெறுமையும் பிடிப்பும் இல்லாத கேலிக்கூத்தாகவே அமைந்திருக்கும். என்னிடம் வரும் அத்தகைய ஒரு யாத்திரீகனுக்கு (மனசிகிச்சை பெற வருபவனுக்கு) நான் அருரு தேவியைப் போலவே அவனது மறைவான சுயத்தினை அறிமுகப்படுத்த முயல்கிறேன்."
என விளக்குகிறார் ஷெல்டான்.பி.கோப் ('If you meet Buddha...' பக்.22)

அதே நேரத்தில் சுயத்தின் இருமைத்தன்மை என்பது கில்காமெஷ் கதைக்கு நடுவோட்டமாக இருப்பினும் சுயத்தின் இருகூறுகளின் பாலியல் தன்மையைக் குறித்து அது அறியாமையுடனேயே இருப்பதாக கருதுகிறார் கோப். பெண் அதில் ஒரு மயக்கும் பொருளாகவே அமைந்துள்ளாள். (அதே, பக்..23) இறுதியாக கில்காமெஷின் முக்கியத்துவம் என்ன?

"மிகப் பல சமயங்களில் நான் என் இறப்பு நிகழ்ந்துவருவதை -நாம் அனைவருமே இந்த மரணப்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை- மறந்துவிடுகிறேன். அத்தருணங்களில் நினைத்திட வேணுமென்பதனை நினைந்திடாத அத்தருணங்களில் நான் ஆட்டமாடுகிறேன். எனக்கு வாழ்வின் மற்றும் மரணத்தின் மடத்தன்மை, தவறவிட்ட சாத்தியங்கள், சாகஸத்தனங்களின் நினைவுகள், தவறவிட்ட பூரணத்துவத்தின் நினைவிசை அலைகள்,...ஏன் தோழர்களின் அன்பு - இவை அனைத்துமே மரணமிழைக்கும் இகழ்வின் முன் தோற்றுவிடுவதை கில்காமெஷின் யாத்திரை எனக்கு நினைவுபடுத்துகிறது. கில்காமெஷ் - என் சகோதரன்- அவனது புண்ணிய யாத்திரை என்னை மறக்கவிடுவதில்லை." (பக். 43)


காம்பெல்லை பொறுத்தவரையில் கில்காமெஷ் கதையில் வரும் சிதூரியின் அறிவுரையில் யூதவிவிலியத்தின் (கிறிஸ்தவர்களின் 'பழைய' ஏற்பாடு) பிரசங்கி பாடல்களில் பின்னாளில்
எதிரொலிப்பதைக் காட்டுகிறார். உதாரணமாக

"இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு உன் கையினை பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்."
இது கில்காமெஷில் சிதூரி.
" நீ போய் உன் ஆகாரத்தை சந்தோசத்துடன் புசித்து உன் திராட்சை இரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி....உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும் உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக....நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கையை அனுபவி"
(பிரசங்கி 9:7-9) அடுத்த வரியை வாசிக்கையில் இதற்கு கில்காமெஷ் காவியத்துடன் இருக்கும் தொடர்பு தெள்ளத்தெளிவாகும். "நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் ஞானமும் இல்லையே."(பிரசங்கி
9:10)

மேலும் காம்பெல் இறுதியில் பாம்பு மரணமின்மையின் இரகசியத்தினை விழுங்குவதைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்:

" எனவேதான் சர்ப்ப சக்தி அழிவின்மையின் சக்தியாக ஒருகாலத்தில் மானுடத்திடம் இருந்தது. அது எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கீழ்நிலை அடைந்துவிட்ட தேவியின் சக்தியாக ஆகிவிட்டது. இழந்த சொர்க்கத்தில் கபடற்ற அச்சமாக."
(Occidental mythology பக்.92)

பாரத தொன்ம சித்திரங்களிலும் கில்காமெஷின் தொன்மத்துடன் ஒற்றுமை கொண்ட சில சித்திரங்களை காணமுடியும்.
அங்க நாட்டரசன் தன் நாட்டு பஞ்சம் தீர்த்திட ரிஷ்யசிருங்கரை வரவழைக்கிறான், பெண்களையே அறியாத அவரை பெண்கள் மூலம் தன் நாட்டிற்கு வரவழைத்து அவருக்கு தனது மகளான சாந்தாவை திருமணம் செய்து வைக்கிறான் ரிஷ்யசிருங்கர் மானின் கொம்புகளுடன் பிறந்தவர் என்கிறது கதை. என்கிடுவின் தொடக்கத்தன்மையுடன் ஒப்பிடத்தக்கதாக இவ்விவரணம் விளங்குகிறது. சாயாகிரகமான ராகு சர்ப்பமாக அமுதத்தை விழுங்கிய புராணக்கதையும் இங்கு நினைவுக்கு வரலாம்.
ராகும் கேதுவும் அமுதத்தை அடைய பயன்படுத்தப்பட்ட சர்ப்பமான வாசுகியே என்றும் அது அமுதத்தை அருந்தியததால் ராகு கேது என பிளக்கப்பட்டது எனவும் மற்றொரு வழக்கும் உண்டு.